சாமிக்கு இது சம்மதமா....

"அடி சக்கே... இது தான்டா மழை, 
இப்படி இருந்தாத்தானே விளச்சல் நல்லா இருக்கும் ".என்று வாரிசுருட்டி எழுந்து உக்கார்ந்து, தனக்கு தானே சொல்லி மகிழ்ந்து கொண்டு.வெற்றிலையை போடத்தொடக்கினார் முத்தையன். 
 
வெட்டும் இடியில் விளக்கு இல்லாமலே,  வெற்றிலைக்கு சுண்ணாம்பு வைக்கவும் முடிந்தது முத்தையனால். சாரல்,
சாளரம் வழி சண்டையிட வீட்டிற்குள் வருவதையும் பொருட்படுத்தாமல் ; அந்த நல்லிரவு நேரத்திலும் மனுசன் தாளம்போட்டு ரசிக்கலானார். சடசடனு கொட்டும் அந்த பெரும் மழையின் இசையை. 

காலையில் எழுந்து பார்த்தால். காடுகழனி எல்லாம் ஒரே வெள்ளக்காடுதான். யாரைப் பார்த்தாலும் புன்னகை பூத்தமுகமாய் இருந்தது. குளம் எல்லாம் நிரம்பி ஓடியதால் வயலெல்லாம் மீனின் துள்ளலாட்டம். அதை பிடித்து விளையாடும் சிறுவர்கள். அதையும் வாங்கி குழம்பு வைக்க ஓடும் பெருசுகள் என்று பார்ப்பதற்கு, அன்றுதான் ஊருக்குள் புதுசா மகிழ்ச்சி என்பது, குடித்தனம் வந்தது போன்றே இருந்தது . 

அன்றிலிருந்து விவசாய வேலை தொடங்கிற்று. யாருக்கும் ஓய்வென்பது  வெற்றிலையில் வைக்கும் சுண்ணாம்பு அளவு கூட கிடைக்கவில்லை. ஊரே பரபரப்பில் இருக்கு. அதிலுங்கூட மாட்டுவண்டி சத்தமும்,  மாட்டின் கழுத்து மணி சத்தமும் புது தெம்மாங்கு பாடவைக்கும் என்றால் பாருங்களேன்....
விவசாயி வேலையின் அலுப்பு தெரியாமல் இருக்கனுனா எதையாச்சும் பாடுவான். 
அதுதான் பொதுவா கிராமத்து வழக்கம்.

ஊருசனம் மொத்தமும் வயல்காட்டில். தூரத்தில் இருந்து பார்த்தால் குட்டி குட்டி பனைமரம் கொண்டை இல்லாமல் வயல்காடு மொத்தமும் நிற்பதாய் தோன்றும். நாட்கள் நகர பச்சயம் பூத்தது வயல்காடு. நட்டது அத்தனையும் தங்கமாய் மின்ன, அந்த தங்கம் தரையில பொங்கி வழிய, பார்த்தவர்கள் மனசும் நெறஞ்சு வழியிது.

இந்த வருடம் நட்டவனுக்கும், நாடி வந்தவனுக்கும் நட்டமில்லை. கூலி ஆட்களோடு சேர்த்து, கொண்டான் கொடுத்தான் எல்லாருக்கும் கொண்டாட்டம்தான் போங்க... 

இந்த சந்தோசத்தை கொடுத்தச் சாமிக்கு சந்தனக் காப்பு, காவடி எடுப்புன்னு... ஊரே ஒரே களியாட்டம் தொடங்கிருச்சு... 

அது மூன்று நாள் திருவிழா. ஆட்டம் பாட்டம்  என்று திருவிழா முப்போதும் கலைகட்டும். மக்கள், மாரியை வாரித் தந்த அம்மனுக்கு தீமிதித்து நன்றியை தெரிவித்துக் கொள்வார்கள். சிலர் காவடி எடுப்பார். சிலர் பால்குடம் எடுப்பார். அதோடு நில்லாமல் அம்மனுக்கு கூழ் ஊத்தவும் சோறாக்கி போடவும் செய்வார்கள். அந்த மூன்றுநாளும் பசி என்பதும் மறந்தே போகும். இரவும் இரவாக இருக்காது. திரைப்படம், நாடகம் என்று ஒரு பக்கமும். பெரிய மனுசங்கள் சீட்டாட்டமும், சிறுசுங்கள் குலுக்கு கட்டையில் பந்தயம் கட்டவுமென்று அது ஒரு பக்கம் நடக்கும்.

அந்த மூன்று நாளும் பாட்டுச் சத்தமும் 
வேட்டு சத்தமும் கேட்காத காத்துக்கும் கேட்கும். அது ஒரு சொர்க்க பூமியாய் தோன்றும். அங்கே சிறுவர்கள்  ஓடி விளையாடி இதுவரை காணாத ஒரு சந்தோசத்தை கண்டுகளிப்பார்கள்.

அதோடு சேர்த்து அங்கே வேடிக்கை பார்க்க மட்டுமே சிலரை காலகாலமாய் நிறுத்தி வைத்திருக்கும் சாமி. அவர்களுக்கும் இனி அனுமதி கொடுக்குமா என்பது சிலரின் கேள்வி. 

திருவிழா முடிந்து மறு எட்டாம் நாள். வரவு செலவு கணக்கு பார்க்கும் கூட்டம் நடைபெற்றது. " திருவிழாவிற்கு ஊரே வாரி வழங்கியது நன்கொடை, அதில் ஒருவர் கூட ஒதுங்கவில்லை."என்று பெருமை பேசியது ஊர் பெருசுங்க. 

" ஆனாலும் சாமி சிலரை வேடிக்கை பார்க்க மட்டுமே ஒதுக்கி வைச்சிருக்கு என்பது யாருமே சொல்லாதக் குறைதான் போங்க... " என்று யாரோட மனசோ சொல்லுது அங்கே...

அந்த சிலரும் சில்லரை கணக்கு பார்க்க சிரித்த முகத்தோடுதான் வந்தார்கள்.

கணக்கில் குறைநிறை இருந்தாலும் கணக்கு, கணக்கா பார்த்து முடிச்சாச்சு. இப்போது கருத்து கேட்பு....

"ம்...
சரி...
அப்பற என்னையா....
திருவிழா நல்லபடியா நடத்தியாச்சு...
எல்லாருக்கும் சந்தோசம் தானே...."
என்றது ஊர் பெருசு..

இல்லை என்று சொல்லக்கூடாது என்பதற்காக ஒருத்தர். " நல்ல்ல்...ல சந்தோசமுங்க பெரியவரே..." என்றார். சிலர் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை, அதையும் சிலர் ஆமோதிக்கவோ, மறுக்கவோ இல்லை. பேச்சுக்காகக் கூட ஒரு வார்த்தையும்  சொல்லவில்லை. எது சொன்னாலும் எடுபடாது என்பதுதான் எழுதப்படாதச் சட்டம்.

சிறிது நேரம் அமைதிக்குப்பின். 
" அப்பறம் என்னப்பா... 
யாருக்கும் மாற்று கருத்து இல்லை. எல்லாரும் ஒத்துழைப்பு கொடுத்திங்க... சந்தோசம்... இதுபோல அடுத்த வருசமும் சிறப்பா செஞ்சிடுவோம். வேறென்ன கூட்டத்தை கலைக்கலாமே... " என்றதும் .

அங்கே நின்றிருந்த கூட்டத்திலிருந்து... தயங்கி தயங்கி ஒரு குரல் வந்தது...
" மூத்தவுகளே... அடுத்த முறையாவது, எங்களுக்கும் ஒருநாள். திருவிழா நடத்த... அனுமதி கொடுங்க... நாங்களும் சந்தோசமா சாமி கும்பிடுவோமுல்ல... என்ற மெல்லிய குரல் வந்தது.

குரல் வந்த திசையை பார்க்கும் முன்னரே, குரல் யாருக்கு சொந்தம் என்பது புரிஞ்சு போச்சு.... பெருசுக்கு...

" யாரது.... 
ஓ... நீயா....
ஏய்யா உனக்கு இந்த வேண்டாத வேலை, 
உனக்கு முன்னாடி உங்கப்பனும் சுப்பனும் இப்படி கேட்கலையே?  "
சிறிது இடை நிறுத்தி.
" நீ என்ன புதுசா கேட்க வந்துட்டே..... "

" உனக்கு கொடுத்தா அவன், இந்தா இவன். அப்பறம் அந்தா நிக்கிறானே... அவனும் கேட்பான்... எல்லாருக்கும் கொடுக்க முடியுமா... " என்றார். அவர் பேச்சில் கொஞ்சம் கோபமும் கலந்திருந்தது..

எவ்வளவு நாள்தான் மூத்தவுகளே....
எட்டி நின்னே சாமி கும்பிடுறது நாங்க. திருவிழா நேரத்தில எங்களால முடிஞ்சதை கொஞ்சங் கொஞ்சம் கொடுக்கிறோம். நாங்க கொடுத்த அரிசி பருப்ப, ஏத்துக்கிட்ட சாமி... எங்களோட தீபாராதனையை மட்டும் ஏத்துக்காதா என்ன மூத்தவுகளே...?

அதுமட்டுமில்லை, 
சாமி சாதி பார்க்குமா...,
அப்படி பார்த்தா... அது சாமியாதான் இருக்க முடியுமா....
சாமியோட பார்வையில மனுசமக்க  எல்லோரும் ஒண்ணுதானே... 

என்று முத்தையன் சொன்னபோது யாருக்கும் இந்த வாதத்தை மறுக்க வார்த்தையே இல்லாமல் போயிற்று. பெரும் அமைதி அங்கு, எங்கிருந்தோ வந்து கூட்டத்தில் அமர்ந்து கொண்டது. 

இருந்தவர்களும் கூட்டத்தில் கூடி நின்றவர்களும் அடுத்து என்ன நடக்குமோனு ஒரு பயத்தோடுதான் இருந்தார்கள். ஆனாலும் அனுமதி கொடுங்கனும், கொடுக்கலாமுன்னும் சொல்ல, ஒருத்தரும்  முன்வரவில்லை.

எப்படி சொல்வார்கள் சாமியே வரங்கொடுத்தாலும் இந்த பூசாரிங்க இடங்கொடுக்க மாட்டார்கள் தானே....

அதெல்லாம் முடியாது முத்தையா...
எப்போதும்போல வா... 
வேண்டானு சொல்லல. 
சாமியை கும்பிடு... போ... 
ஆனா உரிமை கேட்காதே.... 

நானும் இந்த மண்ணுக்கு உரித்தானவன் தானே... மூத்தவுகளே...

அதுக்காக....
உரிமை கொண்டாடுவியா நீயி...
என்று ஒருமையில் பேசியவாரே  ஒதுங்கிய மீசையை தடவி விட்டார்.
அந்த தடவலும் வேண்டுமென்று கூட இருக்கலாம்.

முத்தையன் ஒரு அசட்டு புன்னகையை 
கூடி இருக்கும் கூட்டத்தில் வீசிவிட்டு...

" அனைத்து சாதியும் அர்ச்சகர் ஆகலானு  சட்டம் சொல்லுது. ஆனா ஆலயம் வழிபடவும், திருவிழா நடத்தவும் உனக்கு அனுமதி இல்லையினு....இந்த கர்மம் புடிச்ச சாதி மட்டும்தான், சண்டைக்கு நிற்குது...

எனக்கு உரிமை இல்லையின்னு சொன்னா.... திருவிழா எப்படி நடக்குதுன்னு நானும் பாத்தறேன்..."  என்று துண்டை ஒதரி தோளில் போட்டுக் கொண்டு நடக்கலானார் முத்தையன். 

அம்மனே அங்கிருந்து இறங்கி போவதைப்போல் நினைத்து....கூட்டமே அவரை பார்த்துக் கொண்டிருந்தது...

இன்று வரையிலும் பா(கா)த்து கொண்டிருக்கு ஊர்.

சி.செ

Comments

  1. கிராம வழக்குகள் இன்றும் ஓய்ந்தபாடில்லை. சாதிகளும் தான். சாமி தானாகவே முன்வந்து அனைவருக்கும் தெய்வம் சமமே என்று சாசனம் எழுதினால் தான் உண்டு. மிகவும் அருமையான பதிவு பாராட்டுக்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சாமிதான் வந்து சொல்லனும்

      ஆனாலும் சாமியே வந்து சொன்னாலும் ஏற்பார்களா

      Delete

Post a Comment

Popular posts from this blog

சித்திரம் பேசுதடிக் கண்ணமா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .