அந்த இரண்டு நிமிடம்....

கடுங்கோபத்துடன் இருள் சூழ்ந்து வெளிச்சத்தை விரட்டியடித்துக் கொண்டிருந்தது, மாலையும், மழை மேகமும் சேர்ந்து. அநேகமாக இன்னும் சற்றுநேரத்தில் மழை வரலாமென நினைக்கின்றேன் நான்.

அந்த மலைப்பாதையில் யாருமற்ற தனிமையில் குடைகூட இல்லாமல் நடந்து கொண்டிருந்தாள் நந்தினி. சுற்றிலும் இருந்த மரங்களின் அசைவும் பறவைகளின் இரைச்சலும்
சின்னஞ் சிறிய சில்வண்டின் ரீங்காரமும்
ஒரு இனம் புரியாத பீதியை கொடுத்தது நந்தினிக்கு.

நந்தினி எப்போதும் பேய், பூதம் என்பதற் கெல்லாம் பயப்படுவாளில்லை, ஆனாலும் இந்தச் சூழல் அவளை பயப்பட வைக்குமோ என்பதே எனக்கான பயம்.

தூரத்தில், தன் எதிரில் ஒரு வாகனம். மொத்த சாலையையும் குத்தகைக்கு எடுத்தார்போல் வெள்ளை நிறவொளியை சாலையெங்கும் வண்ணமடித்துக் கொண்டே வந்து கொண்டிருந்தது.

அந்த வாகனம் தன்னருகில் நின்று விடக்கூடாது என்பதே இவள் கவலை. தனிமையில், அதிலும் சாலையில். ஒரு பெண்ணை கண்டால் வாகன ஓட்டி ஒலிப்பானை ஒரு புதுவித ராகத்தில் இசைப்பதும் தொல்லை கொடுப்பதுமாய் இருக்கும் என்பதும் எல்லோரும் அறிந்ததுதானே....

இவள் அருகில் வரவர வாகனம் வேகத்தை குறைப்பது நன்றாக உணரமுடிந்தது நந்தினிக்கு. அவள் தலைநிமிராமல் நடக்கலானாள் 
வாகனம் தன்னை நெருங்கி கொண்டிருக்கிறது என்று நினைக்கும் போது...

நந்தினிக்கு பின்னால் ஒரு வாகனம் வேகமாக வருவதை அதன் வெளிச்சத்தை வைத்தே உணர்ந்தாள். அநேகமாக அது இருச்சக்கர வாகனமாக இருக்கலாம்.

இப்போது " தான் தனிமையில் இல்லை " என்பதை போன்று உணர்ந்தாள்

வேகம் குறைத்த அந்த கார் இப்பொழுது மெல்ல வேகமெடுக்க ஆரம்பித்ததும் இவளுக்கு புரிந்துகொள்ள முடிந்தது.

இரண்டு வாகனமும் தன்னைக் கடந்து,  எந்தத் தொல்லையும் இன்றி போயிற்று என்பதே இவளுக்கு பெரும் மகிழ்ச்சி. நந்தினி எப்போதும் வரும் பேருந்து இல்லை அது என்பதால். அவள் இறங்கும் நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் அடுத்த நிறுத்தத்தில் நிறுத்தியது தான்....
இந்த நடைக்கு காரணம். தனக்குள்ளே நினைத்து கொண்டாள் " இனி போட்டி போட்டு வீடியோ கேம் விளையாடக்கூடாதுப்பா... "என்று.

அதோடு வீட்டிற்கு போனதும் இன்றைக்கு ஒரு பெரிய சம்பவம் நடந்ததுபோன்றும். அதிலிருந்து எப்படி தான் தப்பித்து வந்தேன் என்றும் சொல்லி எல்லோரையும் பீதியில் ஆழ்த்தனும் என்று ஒரு பெரிய திட்டம் தீட்டிக்கொண்டே நடந்தாள். அந்த திருப்பத்தில் திரும்பியதும் திடுக்கிட்டாள்.

இவளை கடந்த அந்த இருசக்கர வாகனம்
சத்தமின்றி அங்கே இருட்டிற்குள் நிற்பது முகப்பு விளக்கின் வெளிச்சம் காட்டிக் கொடுத்தது. அதில் இருக்கும் அந்த கருத்த உருவம் தன் வருகையை எதிர் பார்த்திருக்கிறது என்பதும் புரிந்தது.
நந்தினி இடதுபுறத்திலிருந்து வலதுபுறம் மாறினாள். அந்த உருவம் வண்டியில் இருந்து கீழே இறக்கியது. இவள் பார்த்தும் பார்காதது போல் மெல்ல நடையை வேகப்படுத்தினாள். அந்த உருவம் தன்னை வெளிச்சத்தில் குளிப்பாட்டிக் கொள்ளவும். தான் யாரென்பதை அவளுக்கு காட்டிக் கொள்ளவும் முயற்சித்தது. அதற்குள் அவள் அந்த உருவம் நிற்கும் இடத்திலிருந்து வெகுதூரம் போகவே முயற்சித்தாள்.

இப்போது அந்த உருவம் ஒருவாரு நிலமையை உணர்ந்ததுவாய் " நந்தினி " என்று அழைக்கலாயிற்று

எதிர் பார்க்காத நேரம். அந்த குரல் வந்தது. அதிலும் இவள் பெயரை தாங்கி. அந்த குரல் யாருக்குச் சொந்தம்?  நிற்கலாமா?  திரும்பிப் பார்க்கலாமா? என்று மனதிற்குள் பெரும் போராட்டம். அந்த நேரம் பார்த்து ஒரு வாகனம் இவள் எதிரே வந்தது. அந்த வெளிச்சத்தில் பார்த்தால் அவன் யார் என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்பதை அறிந்து சமயம் பார்த்து திருப்பினாள். 

இப்போது மேலும் அதிர்ச்சி. உண்மையா 
இல்லை பிரம்மையா அவன் சொல்லாமல் எப்படி வருவான். அந்த வாகனம் போவதற்குள் மீண்டும் அந்த திருமுகத்தை பார்த்தாள். அவனேதான் அவனேதான்... தூரத்தில் இருந்தாலும் பீதியைக்கொடுத்து என்னை கட்டிக் கொண்டும் கஸ்டப்படுத்தும் அதே பட்டாளக்காரன்தான் என்பது...

அந்த முகத்தை அடையாளம் கண்டுகொண்டதும் கொஞ்சம் நம்பிகை வந்தது.

இவள் அவனை நோக்கி வந்தாள்,  அவனும் வந்தான். வந்தவன் தனது வாகன வெளிச்சத்தில் தன்னை முழுமையாகக் காட்டினான். அவள் அவனை ஆசுவாசத்துடன் பார்த்து விட்டு,  கட்டிக்கொண்டு அழத்தொடங்கினாள். மழை கொட்டாரம்பித்தது. 

சி. செ

Comments

Popular posts from this blog

சித்திரம் பேசுதடிக் கண்ணமா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .