ஞாயிறு

ஞாயிறு

அண்டம் முழுதும் 
அழகினை விதைக்கும்
ஆதித் தமிழர் இறையே வாழி

திண்ணம் நிறைந்த 
தீப்பிழம் பான
தேவர் தலையே உயிரொளி வாழி

உண்ண உணவாய் 
உயிருடன் கலந்த
உன்ன தமான ஒளிச்சுடர் வாழி

வண்ண நிலவின்  
உடன்பிறப் பாக
வாய்த்த கதிரே வாய்மையே வாழி

அல்லி மலரும் 
அருந்தவ நிலவும் 

அகத்தில் கலந்து காதலில் வீழ

அல்லில் நீயே ஓய்வினை ஏற்றாய்
அகிலந் தன்னில் 
புகழினை ஏற்றாய்!

வெள்ளி நிலவும் 
விளைந்திடும் நிலமும்
கொள்ளை கொள்ளும் 
அழகனும் நீயே

சொல்லில் அடங்காச் 
சுந்தரக் கதிரே
சோகம் தீர்க்கும் சூரியா வாழி!

நீல வானின்  
நெடும்சுடர்  நீயே
நெஞ்சத் தகலா துழைப்பவன் நீயே

சோலை மலர்களின் 
காதலன் நீயே

சோம்பல் விரட்டும் 
கதிரவன் நீயே

பாலை நிலமும் 
பசுமையில் ஒளிர

பாசம் கொண்டே 
அணைப்பவன் நீயே

ஓலை அனுப்பி 
உன்னையே அழைப்பேன்
ஒப்பே இல்லா ஒளிக்கடல் வாழி

சி. செ

Comments

Popular posts from this blog

சித்திரம் பேசுதடிக் கண்ணமா

பிரிவையுணர்த்திய முதல் பயணம்

ஒரு சம்மதம் சொல்வாயா . . .